சந்தவேலூர் அருகே விபத்து: 2 பேர் பலி
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம் மொளச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 40). மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வந்தார்.
இவருடைய வீட்டில் இந்திரசேனா (40) என்பவர் தங்கி மாடுகளை கவனிக்கும் வேலை செய்து வந்தார்.
நேற்று இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சந்தவேலூர் என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தனர்.அவர்கள் சாலை நடுவே உள்ள தடுப்பு சுவர் வழியே சாலையை கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் குமாரும், இந்திர சேனாவும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், பலியான இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.