ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு கடப்பாரை -மண்வெட்டியுடன் வந்தவரால் பரபரப்பு
ஈரோடு:
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்று வந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை அமலுக்கு வந்துள்ளது.
இதன் காரணமாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை. பொதுமக்கள் கொண்டு வரும் மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பட்டியல் போடலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் இருந்து பல்வேறு ஊர்களிலிருந்து வந்த மக்கள் மனுக்களை புகார் பெட்டியில் போட்டனர்.
ஈரோடு இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரகாஷ் என்பவர் கையில் மண்வெட்டி கடப்பாரையுடன் கழுத்தில் ஈரோட்டில் விரைவில் கரசேவை என்ற வாசகத்துடன் வந்திருந்தார். இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சூரம்பட்டி போலீசார் அந்த நபரை தடுத்து நிறுத்தி மண்வெட்டியுடன் உள்ளே செல்ல அனுமதியில்லை என்று கூறினார் இதையடுத்து அவர் மண்வெட்டி கடப்பாரையை வெளியில் விட்டு புகார்ப் பெட்டியில் மனு போட்டார் அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-
ஈரோடு அடுத்த கணபதி பாளையம் காளமங்கலம் குலவிளக்கு அம்மன் கோவிலின் கதவின் முகப்புப் பகுதியில் அண்ணா பெரியார் அன்னை தெரேசா போன்றோரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது இது கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்த உருவங்களை அகற்றி விட்டு ஈரோடு மக்களுக்காக பாடுபட்ட தீரன் சின்னமலை காளிங்கராயன் பொல்லான் ஆகியோர் உருவங்கள் பொறிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் இந்து மக்கள் கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.