செய்திகள்
கோப்பு படம்

சத்தியமங்கலத்தில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு - பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2019-12-09 11:16 GMT   |   Update On 2019-12-09 11:16 GMT
சத்தியமங்கலத்தில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே டாஸ்மாக் புதிய கடை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த மதுக்கடைக்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த மதுக்கடையை திறந்தால் பெண்கள் அந்த பகுதியில் சுதந்திரமாக நடமாட முடியாது. தேவையில்லாத பிரச்சினை ஏற்படும். எனவே மதுக்கடையை திறக்க கூடாது என போர் கொடி தூக்கி வந்தனர்.

மேலும் மதுக்கடையை திறந்தால் வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம். யாருக்கும் ஓட்டு போட மாட்டோம் என்று நோட்டீசு அச்சடித்து பொதுமக்கள் அதை வினியோகம் செய்தனர்.

இந்த பரபரப்புக்கு இடையே இன்று காலை 9 மணி அளவில் அந்த பகுதி பொதுமக்கள் மதுக்கடையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சத்தியமங்கலம்- கோவை நெடுஞ்சாலையில் நடுரோட்டில் அமர்ந்து இந்த சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. பிறகு மறியல் நடத்திய பொதுமக்கள் அந்த இடத்தில் இருந்து சென்று எஸ்.ஆர்.டி. கார்னரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அசம்பாவிதம் சம்பவம் நடக்காமல் இருக்க சத்திய மங்கலம் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு தாசில்தார் பெரியசாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா ஆகியோர் விரைந்து வந்தனர். அவர்கள் சாலை மறியல் நடத்திய மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த பகுதியில் மதுக்கடை அமையக்கூடாது. திறக்க கூடாது என்பதில் பொதுமக்கள் உறுதியாக இருந்தனர். மேலும் உள்ளாட்சி தேர்தலையும் புறக்கணிப்போம் என்று கூறினர்.

அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News