தொடர் மழையால் அகல்விளக்கு உற்பத்தி பாதிப்பு- தொழிலாளர்கள் வேதனை
வேலூர்:
கார்த்திகை தீபவிழா 10-ந் தேதி நடைபெறுகிறது. அகல்விளக்குகளில் தீபம் ஏற்றப்படும். கண்ணமங்கலம் பகுதியில் பெய்த தொடர் மழையால் அகல் விளக்குகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
படவேடு பகுதியில் கார்த்திகை அகல்விளக்கு, அலாவுதீன் விளக்கு, மேஜிக் விளக்கு மற்றும் மேஜிக் மண்பாண்ட ஜக் உள்பட பல்வேறு வகையான மண்பாண்ட பாத்திரங்கள் செய்து விற்பனை செய்யும் தொழிலாளி தர்மலிங்கம் கூறியதாவது;
நாங்கள் பரம்பரை பரம்பரையாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். கார்த்திகை தீபத்துக்கு அகல்விளக்குகள் தயார் செய்து உள்ளோம். ஆனால் தொடர் மழை காரணமாக தயாரிக்கப்பட்ட அகல் விளக்குகள் வெயிலில் காய வைக்க முடியாமல் உள்ளது.
தற்போது நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து உள்ளதால் கடந்த ஏப்ரல் மாதத்தில் சேகரித்து வைத்த மண் கொண்டு அகல்விளக்குகள் தயாரித்தோம். மண்பாண்டத்தின் மூலம் தற்போது அலாவுதீன் விளக்கு, மேஜிக் விளக்கு, மேஜிக் தண்ணீர் ஜக்கு, உள்பட பல்வேறு விதமான விளக்குகள் செய்து விற்பனை செய்கிறோம். என்றார். பொதுவாக அகல்விளக்குகள் மூலம் ஏற்றப்படும் தீபம் மன அமைதி, காரிய வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.