பனப்பாக்கம் அரசு பள்ளியில் லேப்டாப்கள் திருட்டு
வேலூர்:
பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ஏற்கனவே லேப்-டாப் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களுக்கு 83 லேப்-டாப்களை அங்குள்ள அறிவியல் ஆய்வகத்தில் வைத்திருந்தனர். பள்ளியில் இரவு நேர காவலராக சின்னபொண்ணு என்பவர் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று மர்ம நபர்கள் அறிவியல் ஆய்வக பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கிருந்த 13 லேப்-டாப்களை மட்டும் திருடி சென்று விட்டனர். இன்று காலை பள்ளியில் திருட்டு நடந்ததை கண்டு தலைமை ஆசிரியர் ஆதிமூலம் மற்றும் ஆசிரியர்கள் திடுக்கிட்டனர்.
இதுபற்றி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். பள்ளியில் லேப்-டாப் இருப்பதை தெரிந்து திருடியுள்ளனர். 13 லேப்-டாப் மட்டுமே திருடு போயிருப்பதால் இதில் ஒருவர் மட்டும் ஈடுபட்டிருக்க வேண்டும். அதனால் தான் தூக்கி செல்ல முடியாமல் மற்ற லேப்-டாப்களை விட்டு சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.