தஞ்சை ரெட்டிப்பாளையத்தில் மழையால் சேதமான மண்சாலையால் பொதுமக்கள் அவதி
தஞ்சாவூர்:
தஞ்சை ரெட்டிப்பாளையம் சாலையில் வேதவள்ளி நகர் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் சில இடங்களில் சாலை வசதி இல்லை. இந்த நிலையில் தஞ்சையில் கடந்த ஒரு வாரமாக பெய்து வந்த கனமழையில் இங்குள்ள மண் சாலை சேறும், சகதியுமாக, குண்டும், குழியுமாக மாறியது. அதில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஆகி நோய் பரவும் அபாயம் உள்ளதால் இங்கு வசிக்கும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இந்த சாலையை கடந்து தான் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் செல்ல வேண்டும். அவர்கள் வேறு வழியின்றி சேறும், சகதியாக உள்ள சாலையில் செல்கின்றனர். இதனால் அவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். பள்ளி, கல்லூரிக்கு சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகள் துயரத்துக்கு ஆளாகி உள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் சேற்றில் சிக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். முதியவர்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். மேலும் கனரக வாகனங்களும் இந்த வழியாக வருவதால் சாலை மேலும் மோசமாகிறது. இப்படி தரமற்ற சாலையால் வேதவள்ளி நகர் மக்கள் நாள்தோறும் அவதியடைந்து வருகின்றனர். தரமான தார் சாலை போட வலியுறுத்தி மழைகாலத்திற்கு முன்னதாகவே சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இனியாவது போக்குவரத்துக்கு ஏற்றவாறு தார் சாலை அல்லது சிமெண்ட் சாலை போடுவார்களா? என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.