பவானி அருகே தோட்டத்தில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை
ஈரோடு:
பவானி அடுத்த சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 84). பழனிச்சாமி கடந்த சில மாதங்களாக நோயால் அவதிப்பட்டு வந்தாராம். அவரது குடும்பத்தார் அவருக்கு ஆறுதலாக இருந்து வந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று பழனிச்சாமியின் மகன் ராஜேந்திரன் தந்தைக்கு போன் செய்துள்ளார். ஆனால் பழனிச்சாமி போன் எடுக்கவில்லை இதனால் சந்தேகமடைந்த ராஜேந்திரன் தந்தையை பல்வேறு இடங்களில் தேடினார்.
பெரியபுலியூர் அருகே பூலப்பாளையம் பகுதியில் ஒரு தோட்டத்தில் சென்று பார்த்தபோது பழனிச்சாமி விஷத்தைக் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் தந்தையை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். டாக்டர் பரிசோதனை செய்தபோது பழனிச்சாமி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.