வேலூர் சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து கொள்ளை
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலையொட்டி சாலை கெங்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் பூஜைகள் நடக்கிறது. அம்மன் சன்னதி முன்பும் கோவிலுக்கு வெளியே உள்ள சிங்கத்தின் வாய் வழியாக காணிக்கை செலுத்தும் வகையில் உண்டியல்கள் வைக்கபட்டுள்ளன.
நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலுக்கு பின்புறம் உள்ள காணாறு வழியாக உள்ளே புகுந்தனர். அம்மன் காலடியில் உள்ள சிலையை தூக்கி வந்து சாமி சன்னதியில் உள்ள உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்தனர்.
மேலும் சிங்கத்தின் வாய்வழியாக காணிக்கை செலுத்தும் உண்டியலை பின்பக்கமாக உடைக்க முயற்சி செய்துள்ளனர். அதனை உடைக்க முடியாததால் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் உண்டியல்கள் உடைக்க பயன்படுத்திய சிலையை உண்டியல் அருகே வீசி விட்டு சென்றுவிட்டனர். இன்று காலை கோவிலில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
இது பற்றி சத்துவாச்சாரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கோவிலில் எதுவும் கொள்ளை போகவில்லை என போலீசார் தெரிவித்தனர். திருட்டு கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எப்போதும் ஆள்நட மாட்டம் உள்ள இந்த பகுதியில் கொள்ளை கும்பல் புகுந்து உண்டியலை உடைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போலீசார் ரோந்தை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.