செய்திகள்
திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்
திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் செய்தனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள கதிரிமங்கலம் நேருநகர் பகுதியில் 2 போர்வெல்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக போர்வெல் பழுதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது பற்றி பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலிகுடங்களுடன் திரண்டனர்.
அவர்கள் திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். புதிய போர்வெல் அமைத்து குடிநீர் சப்ளை செய்யப்படும் என உறுதி அளித்தனர்.
இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.