செய்திகள்
ஜோலார்பேட்டையில் ரெயில் பயணிகளிடம் நகை திருடிய வாலிபர் கைது
ஜோலார்பேட்டையில் ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயில் பயணிகளிடம் நகை திருடிய வாலிபரை கைது செய்தனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயில்களில் நகை பணம் செல்போன் ஆகியவை திருடப்பட்டு வருகிறது. இந்த சம்பவங்களை தடுக்க ரெயில்வே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் ஒன்றாவது பிளாட்பாரத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் வாலிபர் பள்ளிகொண்டா இந்திரா நகரை சேர்ந்த வெற்றிவேல் (வயது 23) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஓடும் ரெயில்களில் பயணிகளிடம் திருடியது தெரியவந்தது. கடந்த மே மாதம் பெங்களூரு செல்லும் ரெயிலில் கிருஷ்ண கிஷோர் என்பவரிடம் ஒரு பவுன் தங்க நகை மற்றும் பிப்ரவரி மாதம் பெங்களூரு ரெயிலில் குல்திப் என்பவரிடம் ஒரு பவுன் தங்க நகை, காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண் பயணியிடம் செல்போன் திருடியது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வெற்றிவேலை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 பவுன் நகை செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.