செய்திகள்
கோப்பு படம்

2-வது திருமணம் செய்து கொண்டு கொலை மிரட்டல் - டாக்டர் மீது மனைவி புகார்

Published On 2019-11-12 09:57 GMT   |   Update On 2019-11-12 09:57 GMT
காரைக்குடியில் 2-வது திருமணம் செய்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்த டாக்டர் மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் கண்ணகி (வயது34). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் நல டாக்டர் ராமசுப்பிரமணியன் (44) என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

அப்போது பெண் வீட்டார் சார்பில் 75 பவுன் நகை, ரூ.8 லட்சம் மதிப்பிலான வெள்ளி, சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டன. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் கண்ணகி புகார் கொடுத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருக்கும், எனக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. எனக்கு தெரியாமல் சீதாலட்சுமி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். மேலும் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் என்னை கொடுமைப்படுத்தி கொலை மிரட்டலும் விடுத்தனர்.

எங்கள் வீட்டில் இருந்து கொடுக்கப்பட்ட நகை மற்றும் சீர்வரிசை பொருட்களையும் தரமறுத்து விட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி விசாரணை நடத்தி டாக்டர் ராமசுப்பிரமணியன், சீதாலட்சுமி, பெற்றோர் ராமசாமி- ரமணி, சகோதரி மல்லிகா ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
Tags:    

Similar News