செய்திகள்
பலியான குழந்தையின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி.

அரியலூர் அருகே பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை பலி

Published On 2019-11-11 08:58 GMT   |   Update On 2019-11-11 08:58 GMT
அரியலூர் அருகே பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை பலியான சம்பவம் தொடர்பாக பள்ளி வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள திருகளப்பூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் ராகுல் (வயது 2). இவன் இன்று காலை வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது அந்த வழியாக மாணவர்களை ஏற்றிக்கொண்டு தனியார் பள்ளி வேன் வந்தது. இந்தநிலையில் எதிர்பாராவிதமாக வேன் ராகுல் மீது மோதியது. இதில் சக்கரத்தில் சிக்கிய ராகுல் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானான். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இது குறித்த தகவல் அறிந்ததும் ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் ராகுல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து விசாரணை வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய பெரிய கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பள்ளி வேன் டிரைவர் ராஜதுரையை கைது செய்தனர்.




Tags:    

Similar News