செய்திகள்
கொள்ளை (கோப்புப்படம்)

அரக்கோணத்தில் ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 8½ பவுன் நகை திருட்டு

Published On 2019-11-09 11:15 GMT   |   Update On 2019-11-09 11:15 GMT
அரக்கோணத்தில் ஓடும் ரெயிலில் பெண்ணிடம் இருந்து 8½ பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:

சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 60). தனியார் நிறுவன ஓய்வுபெற்ற அலுவலர். இவரது மனைவி ஜெயந்தி (55).

இவர்கள் நேற்று கட்சிகுடாவில் இருந்து செங்கல்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் குளிர்சாதன பெட்டியில் ஆந்திரா மாநிலம் ராஜம்பேட்டை பகுதியில் இருந்து ஏறி பயணம் செய்தனர்.

ரெயில் திருத்தணி ரெயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்த போது ஜெயந்தி வைத்திருந்த கைப்பையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அதில் 8½ பவுன் நகை, ஒரு செல்போன் வைத்திருந்தார்.

இதுகுறித்து ஜெயந்தி அரக்கோணம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், வெங்கடேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அணைக்கட்டு தாலுகா அப்புக்கல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று பயணித்தார்.

ரெயில் காட்பாடி ரெயில் நிலையம் அருகே வரும் போது வசந்தகுமாரின் செல்போனை அருகில் நின்றிருந்த வாலிபர் ஒருவர் நைசாக திருடினார்.

இதை பார்த்த வசந்தகுமார் அந்த வாலிபரை பிடித்து காட்பாடி ரெயில்வே போலீசில் ஒப்படைத்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதி பண்ணாவாடி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (29) என்பதும், அவர் மீது சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் செல்போன் திருடியதாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழில்வேந்தன் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
Tags:    

Similar News