செய்திகள்
கொலை

காரைக்குடி அருகே வாலிபர் வெட்டிக் கொலை

Published On 2019-11-09 07:38 GMT   |   Update On 2019-11-09 07:38 GMT
காரைக்குடி அருகே போன் பேச வீட்டின் வெளியே வந்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள தாணிச்சா ஊரணியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன்கள் ஆறுமுகம், பஞ்சு என்ற பஞ்சவர்ணம் (வயது 40).

சகோதரர்கள் 2 பேரும், காரைக்குடி ரெயில் நிலையம் அருகே உள்ள குட்செட் ரோட்டில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வேலை பார்த்து வந்தனர். பஞ்சவர்ணம் தனது உறவினர் நடத்திய மதுபாரில் சில மாதங்களுக்கு முன்பு வேலை பார்த்தார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த வேலையை விட்டு விட்டார். நேற்று இரவு சகோதரர்கள் 2 பேரும் வீட்டில் இருந்தனர்.

அப்போது பஞ்சவர்ணத்துக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதனை பேசிக்கொண்டே அவர், வீட்டிற்கு வெளியே வந்தார். அங்கு ஒருவர் நின்றார். அவர் பஞ்சவர்ணத்திடம் ஏதோ பேச்சு கொடுத்தார்.

அப்போது அங்கு கார் வந்தது. அதில் இருந்து ஒருவன் இறங்கினான். அவனும் ஏற்கனவே பஞ்சவர்ணத்துடன் பேசிக் கொண்டிருந்தவரும் சேர்ந்து அரிவாளால் சரமாரியா வெட்டினர்.

பஞ்சவர்ணத்தின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த சகோதரர் ஆறுமுகம் ஓடிவந்தார். அவரை பார்த்ததும் அரிவாளால் வெட்டிய 2 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த பஞ்சவர்ணத்தை, சகோதரர் ஆறுமுகம் மீட்டு, காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பஞ்சவர்ணம் பரிதாபமாக இறந்தார்.

கொலை குறித்த தகவல் கிடைத்ததும் அழகப்பாபுரம் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகள் மூலம் குற்றவாளிகள் யார்? என அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News