செய்திகள்
விளையாட்டு திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்ட கிராமங்களில் இளைஞர் விளையாட்டு திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்

Published On 2019-10-26 08:51 GMT   |   Update On 2019-10-26 08:51 GMT
சிவகங்கை மாவட்ட கிராமங்களில் இளைஞர் விளையாட்டு திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டத்தில் 445 கிராம ஊராட்சிகளிலும், 12 டவுண் பஞ்சாயத்துகளிலும் உள்ள இளைஞர்களின் விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கவும், அதை வெளிக்கொணரவும் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டதின்படி, அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் டவுண் பஞ்சாயத்துகளில் இருபாலருக்கும் தனி தனியாக அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு அமைக்கப்படும்.

ஒவ்வொரு கிராமத்திலும் கபடி, வாலிபால் மற்றும் கிரிக்கெட் (அல்லது) பூப்பந்து (அல்லது) இதர விளையாட்டுகள், இவற்றில் ஏதேனும் மூன்று விளையாட்டுகளுக்கு மைதானம் அமைக்கப்படும். மேலும், இளைஞர்களுக்கு போதிய பயிற்சி அளித்து ஊராட்சி ஒன்றிய, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

அதன்படி போட்டியில் கலந்து கொள்ள 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தகுதி உடையவர். போட்டியில் கபடி அணியில் குறைந்தபட்சம் 17 நபர்களும், வாலிபால் அணியில் குறைந்தபட்சம் 17 நபர்களும், கிரிக்கெட் அல்லது பேட்மிண்டன் அணியில் குறைந்தபட்சம் 17 நபர்களும் (இருபாலரும்) கலந்து கொள்ளலாம்.

எனவே, சிவகங்கை மாவட்டத்தில் 445 கிராம ஊராட்சிகளிலும், 12 டவுண் பஞ்சாயத்துகளிலும் உள்ள இளைஞர்கள் கபடி, வாலிபால் கிரிக்கெட் அல்லது பேட்மிண்டன் ஏதேனும் மூன்று விளையாட்டுகளுக்கு அந்தந்த கிராம ஊராட்சி செயலாளர்கள் மற்றும் டவுண் பஞ்சாயத்து செயலாளர்களிடம் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், விபரங்களுக்கு 7401703503 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News