ஈரோட்டில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
ஈரோடு:
ஈரோடு ரெயில் நிலையத்திற்கும் காவிரி ரெயில் நிலையத்திற்கும் இடையே உள்ள தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ரெயில்வே சப்- இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணையில் ரெயிலில் அடிபட்டு இறந்த வாலிபர் ஈரோடு கொல்லம்பாளையம், வண்டிக்காரன் தோட்டம் பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 30) என தெரிய வந்தது.
முருகேசன் வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டு ரெயிலில் மீண்டும் ஈரோடு வந்து கொண்டிருந்தார். அப்போது ரெயிலில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த முருகேசன் தவறி கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.