செய்திகள்
ஈரோட்டில் இரும்பு கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு
ஈரோட்டில் இரும்பு கடையில் பூட்டை உடைத்து அங்கிருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு கே எம் கே ரோடு பகுதியை சேர்ந்தவர் அபிபுல்லா (வயது 65). இவர் அதே பகுதியில் இரும்பு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் அபிபுல்லா தனது கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்றார். காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைத்திருந்த ரூ 30 ஆயிரம் பணம் திருட்டு போனது தெரியவந்தது. மர்ம நபர் யாரோ நள்ளிரவில் நோட்டமிட்டு கடையின் பூட்டை உடைத்து கைவரிசையை காட்டியுள்ளான்.
இதுகுறித்து அபிபுல்லா கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.