செய்திகள்
பொதுமக்கள் சாலை மறியல் செய்த காட்சி.

விருத்தாசலத்தில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2019-09-29 17:44 GMT   |   Update On 2019-09-29 17:44 GMT
விருத்தாசலத்தில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம், 

விருத்தாசலம் 33-வது வார்டு சித்தலூர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக அதே பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, அதில் இருந்து பொதுக்குழாய் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணியின் போது குடிநீர் குழாய் உடைந்தது

இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் உடைந்த குழாயை சரி செய்து, குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் குடிநீர் குழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் சித்தலூர் பகுதி பொதுமக்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்றும், விளை நிலங்களுக்கு சென்றும் தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உடைந்த குழாயை சரி செய்து குடிநீர் வினியோகம் செய்யக்கோரியும், உரிய நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் நேற்று காலை சித்தலூர் பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் விருத்தாசலம்- ஜெயங்கொண்டம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள், எங்களுக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். அதற்கு போலீசார், இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் விருத்தாசலம்- ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் ¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News