செய்திகள்
தண்ணீரில் மூழ்கி பலி

குள்ளஞ்சாவடி அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

Published On 2019-09-25 16:48 GMT   |   Update On 2019-09-25 16:48 GMT
குள்ளஞ்சாவடி அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
குறிஞ்சிப்பாடி:

குள்ளஞ்சாவடி அருகே கருப்பஞ்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சிவாரத்தினம் (வயது 31). விவசாயி. இவர் அதே ஊரில் தனக்கு சொந்தமான வயலில் பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க சென்றார். பின்னர் அவர் பூச்சி மருந்து தெளிக்க அருகில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கிணற்றில் தவறி விழுந்தார். இதில் பாறையில் மோதியதில் படுகாயம் அடைந்த சிவாரத்தினம் தண்ணீரில் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் இறங்கி சிவாரத்தினத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். 

இதையறிந்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து அவரது தாய் தமிழரசி அளித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News