செய்திகள்
வேலூர் அருகே கண்டெய்னர் லாரியை கடத்திய 4 பேர் கைது
வேலூர் அருகே கண்டெய்னர் லாரியை கடத்திய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயில் அடைக்கப்பட்டனர்.
வேலூர்:
சென்னை பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான கண்டெய்னர் லாரி கடந்த மாதம் 21-ந் தேதி சென்னை துறைமுகத்திலிருந்து ரூ.11 லட்சம் மதிப்பிலான வாகன உதிரிபாகங்கள் ஏற்றி கொண்டு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. துரை என்பவர் இந்த லாரியை ஓட்டிச் சென்றார்.
வேலூர் அருகே பூட்டுத்தாக்கு பகுதியில் டிரைவர் துரை கண்டெய்னர் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு அருகில் இருந்த ஓட்டலில் சாப்பிட சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் லாரியை கடத்தி சென்றனர். சாப்பிட்டு வெளியே வந்து பார்த்த போது லாரி இல்லாததை கண்டு டிரைவர் துரை அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக லாரி உரிமையாளர் வெங்கடேஷுக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் லாரியில் இருந்த ஜி.பி.எஸ் கருவி மூலம் லாரி எங்கே சென்று கொண்டிருக்கிறது என வெங்கடேஷ் கண்காணித்து வந்தார்.
ரத்தினகிரி போலீசார் உதவியுடன் தொடர்ந்து லாரி எங்கே செல்கிறது என கண்காணிக்கப்பட்டது. அப்போது பள்ளிகொண்டா டோல்கேட் அருகே லாரி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் கையும் களவுமாக லாரியை மடக்கி பிடித்தனர்.
அதனை கடத்தி சென்ற வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த ராம்குமார் (22), அசோக்குமார் (29), முத்துமண்டபத்தை சேர்ந்த லோகேஷ் (21), விருதம்பட்டு அன்பழகன் (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில் கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.