வரட்டுப்பள்ளம்-குண்டேரி பள்ளம் ஈரோடு மாவட்ட அணை பகுதிகளில் பலத்த மழை
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று மாலை மற்றும் இரவில் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக அணைப் பகுதிகளில் இரவு இடி-மின்னலுடன் மழை கொட்டியது. பவானிசாகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் அணைப்பகுதியிலும் நல்ல மழை பெய்தது. இந்த மழையால் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பவானி சாகர் பகுதியில் 45.4 மி.மீ மழை பதிவானது.
இதேபோல் கோபி அருகே உள்ள குண்டேரி பள்ளம் அணை பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. இதேபோல் அந்தியூர் மற்றும் அதன் அருகே உள்ள வனப்பகுதி அடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணை பகுதியிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 46.2 மி.மீ மழையும் குண்டேரி பள்ளம் அணை பகுதியில் 24 மி.மீ மழையும் கொட்டியது. இதேபோல் கொடிவேரி அணை பகுதியிலும் 15.2 ம.மீ மழை பெய்தது.
மேலும் நம்பியூர், சத்தியமங்கலம், கோபி, மொடக்குறிச்சி, அம்மாபேட்டை பகுதியிலும் நேற்று இரவு மழை பெய்தது. சத்தியமங்கலத்தில் 35மி.மீ, கோபியில் 37மி.மீ, நம்பியூரில் 32மி.மீ, மொடக்குறிச்சியில் 10மி.மீ, அம்மாபேட்டையில் 8.2மி.மீ மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சத்தியமங்கலத்தில் பெய்த மழையால் வரதம் பாளையத்தில் ஒரு வீட்டுக்குள் மழை நீருடன் கழிவு நீர் புகுந்தது. மேலும் அப்பகுதி மக்களும் இதனால் கடும் அவதி அடைந்தனர்.