செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருமண நிகழ்ச்சிக்காக அழங்கரிக்கப்பட்ட காட்சி

ஆடம்பர திருமணத்தால் சர்ச்சை: சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு கையகபடுத்த வேண்டும் - போலீசில் புகார்

Published On 2019-09-21 14:17 GMT   |   Update On 2019-09-21 14:17 GMT
சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர்கோவிலில் திருமணம் விழா சர்ச்சையை தொடர்ந்து அந்த கோவிலை அரசு கையகபடுத்த வேண்டும் என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர்கோவில் உள்ளது. இங்கு ராஜசபை என அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாசி பட்டாசு அதிபரின் இல்ல திருமண விழா கடந்த 11-ந் தேதி நடந்தது. இது பக்தர்களுக்கு இடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதோடு பல்வேறு இந்து அமைப்பினரும் இந்த திருமண விழாவை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் விளைவாக திருமணத்தை நடத்திய பட்டு தீட்சிதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனாலும் தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பிவருகிறது.

இந்த நிலையில் வல்லம் படுகை நடராஜர் தீர்த்தவாரி கட்டளை தாரரும், சிதம்பரம் நகராட்சி முன்னாள் தலைவருமான சவுந்திர பாண்டியன் சப்-கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது :-

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்த ஆடம்பர திருமணத்தால் புனித தன்மை கெட்டுவிட்டது. எனவே திருமணத்திற்கு அனுமதி அளித்த தீட்சிதர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களை கைது செய்யவேண்டும். கோவில் வருமானத்திற்கு உரிய கணக்கு வழக்கு எதுவும் இல்லை. எனவே அதனை தணிக்கை செய்து சிதம்பரம் கோவிலை கையகபடுத்த அரசு தனிசட்டம் இயற்ற வேண்டும்.

கோவிலை வைத்து ஆண்டு தோறும் பல லட்சம் ரூபாய் வசூல் செய்து வரும் தீட்சிதர்களின் சொத்துக்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்.

தமிழக அரசு இதன்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்னும் 10 நாட்களில் பொதுமக்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

இதேபோல இந்து மக்கள் கட்சியினரும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிநவை சந்தித்து தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளனர்.

Tags:    

Similar News