செய்திகள்
தடையை மீறி மறியல்: திருச்சி காங்கிரசார் மீது 2 பிரிவுகளில் வழக்கு
திருச்சியில் நேற்று தடையை மீறி மறியல் செய்த காங்கிரசார் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
திருச்சி:
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் குறித்து தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இழிவாக பேசியதை கண்டித்தும், இந்தி திணிப்பை புகுத்தும் அமித்ஷாவை கண்டித்தும் திருச்சியில் நேற்று காங்கிரசார் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான அருணாசல மன்றம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர், தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், ரெக்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது திடீரென அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய காங்கிரசார் சாலையில் அமர்ந்து மறியலுக்கு முயன்றனர். அப்போது தடுத்த கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப்- இன்ஸ்பெக்டர் தயாளன் ஆகியோர், ஆர்ப்பாட்டம் செய்ய மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மறியல் செய்தால் கைதாவீர்கள் என்று எச்சரித்தனர்.
அனால் அதை மீறி காங்கிரசார் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் போலீசாருடன் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போலீசாருடன் தள்ளு முள்ளும் உருவானது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியல் செய்த காங்கிரசார் 21 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அவர்கள் மீது 141, 143 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இரவு 9 மணியளவில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.