செய்திகள்
கீழ்வேளூர் அருகே பூட்டிய வீட்டில் நகை- பட்டு சேலைகள் திருட்டு
கீழ்வேளூர் அருகே பூட்டிய வீட்டில் கதவை உடைத்து நகை மற்றும் பட்டு சேலைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
நாகப்பட்டினம்:
கீழ்வேளுர் அடுத்த ஆழியூர் மேல தெருவை சேர்ந்தவர் தம்பிகனி (வயது 65). இவர் தனது மனைவியுடன் நேற்று மதியம் திருவாரூர் அருகே உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை தம்பிகனி வீட்டுக்கு வேலைக்கார பெண் சென்றுள்ளார். அப்போது வீட்டு கதவு திறந்து கிடந்துள்ளது இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதுபற்றி அந்த பெண் தம்பிகனிக்கு தகவல் தெரிவித்தார். அவர் வீட்டுக்கு வந்து பீரோவை பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 1 பவுன் நகை, 2 கை கடிகாரம் மற்றும் பட்டு சேலைகள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.
இதுபற்றிய புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தம்பிகனி வீடு பூட்டியிருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பின்புற கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவை திறந்து நகை மற்றும் பட்டு சேலைகள் கை கடிகாரத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நாகையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.