ஆறுகளில் தண்ணீர் திறந்து விட்டபிறகு தூர்வாருவது கஜானாவை தூர்வாருவதற்காக தான்- டிடிவி தினகரன்
குத்தாலம்:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் அதிக அளவில் அன்னிய முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளதாக, அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. எந்த கூட்டணியில் இருக்கிறதோ அந்த கூட்டணிக்கு ஆதரவாகத்தான் அவர் பேசுவார். தற்போது அ.தி.மு.க கூட்டணியில் இருப்பதால் அப்படித் தான் பேசுவார்,
பொதுவாக, கோடைக்காலத்தில் ஆறுகள் வறண்டு இருக்கும் போதுதான் தூர்வாரப்படும். தற்போது, தண்ணீர் திறந்துவிடப்பட்ட பிறகு தூர்வாருவது எதற்காக என்பது உங்களுக்கே தெரியும்.
டெல்டா மாவட்டங்களில் வருங்காலங்களில் சரியான நீர் மேலாண்மை அமைத்துத் தரப்படும் என்று எடப்பாடி தெரிவித்தார். ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய தூர்வாரும் பணியை, தற்போது மேற்கொள்வது கஜானாவை தூர்வாருவதற்காகவே என மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மக்கள் நீண்டகாலமாக போராடி வருகிறார்கள். இதுபற்றி இந்த மாவட்ட அமைச்சரிடம் தான் கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.