செய்திகள்
கோப்பு படம்

பட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்

Published On 2019-09-16 09:31 GMT   |   Update On 2019-09-16 09:31 GMT
மயிலாடுதுறை அருகே பட்டதாரி பெண்னை காரில் கடத்தி சென்ற வடமாநில கும்பல் அவரை பாதியில் இறக்கி விட காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கிளியனூர் வேளூர் பகுதியை சேர்ந்தவர் சிற்றரசு. இவரது மகள் காயத்ரி (வயது 26). பட்டதாரியான இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் தினமும் தனது ஸ்கூட்டரில் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் தனது பணியை முடித்து விட்டு வீட்டுக்கு காயத்ரி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வீட்டு அருகே சிறிதுதூரத்தில் அதிவேகமாக வந்த ஒரு கார், காயத்ரி ஸ்கூட்டரை வழிமறித்து நின்றது. திடீரென காரில் இருந்து இறங்கிய 3 பேர் கொண்ட கும்பல் , காயத்ரியை வலுக்கட்டாயமாக குண்டுக் கடடாக தூக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கும்பலின் பிடியில் இருந்து தப்பிக்க கூச்சல் போட்டார். ஆனால் அந்த சமயத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் மர்ம கும்பல் சிறிதும் தாமதிக்காமல், காரில் காயத்ரியை தூக்கிப்போட்டு கடத்தி சென்றனர்.

இதற்கிடையே வீட்டுக்கு வராமல் இருந்ததால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது வீட்டு அருகே காயத்ரி ஸ்கூட்டர் மற்றும் செருப்புகள் கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் கூறியதை கேட்டு திடுக்கிட்டனர்.

உடனே சம்பவ இடத்துக்கு சென்று அவர்கள் பார்வையிட்டனர். இதையடுத்து இந்த சம்பவம் பற்றி காயத்ரியின் பெற்றோர் பெரம்பூர் போலீசில் புகார் செய்தனர்.அப்போது மயிலாடுதுறை டி.எஸ்.பி. வெள்ளத்துரை, ஒரு வழக்கு சம்பந்தமாக போலீஸ் நிலையத்திற்கு வந்தார். இந்த சம்பவம் பற்றி அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கிளியனூர், பள்ளிவாசல் மற்றும் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காமிராக்களின் பதிவை வைத்து சோதனை செய்யப்பட்டது.

இதற்கிடையே நள்ளிரவு 1 மணி அளவில் காயத்ரி, தனது தந்தை சிற்றரசுக்கு செல்போனில் பேசினார். அப்போது தன்னை கடத்திய கும்பல், திருவாரூர் கங்களாஞ்சேரியில் இறக்கி விட்டு தப்பி சென்று விட்டதாக தெரிவித்தார். இதனால் உடனே சிற்றரசு, போலீசார் துணையுடன் கங்களாஞ்சேரிக்கு சென்று காயத்ரியை மீட்டு வீட்டுக்கு கொண்டு வந்தார்.

பின்னர் போலீசார், காயத்ரியிடம் விசாரணை நடத்தினர்.

என்னை வீடு அருகே காரில் வந்த 3 பேர் கும்பல் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தினர். இரவு நேரமாக இருந்ததால் கார் எந்த திசையில் போகிறது என்று தெரியவில்லை. காரில் இருந்த 3 பேரும் இந்தியில் பேசினார்கள்.

என் காதில் கிடந்த கம்மலை கழட்டி கொண்டனர். மேலும் கொலுசையும் எனக்கு நிச்சயத்தார்த்துக்காக போடப்பட்ட மோதிரத்தையும் பிடுங்கிக் கொண்டனர். அப்போது நான் அந்த கும்பலிடம், தயவுசெய்து என்னை விட்டு விடுங்கள். எனக்கு திருமணம் விரைவில் நடக்க உள்ளது’ என்று கதறி அழுதேன். அப்போது அவர்கள் என்னை செல்போனில் போட்டோ எடுத்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் 3 பேரும் இந்தியில் ஏதோ பேசிக்கொண்டனர். இதையடுத்து கங்களாஞ்சேரியில் காரை நிறுத்தி விட்டு என்னை இறங்கினர். அப்போது என்னிடம் அவர்கள் பிடுங்கிய மோதிரத்தை மட்டும் என்னிடம் திருப்பி கொடுத்து விட்டனர்.

பிறகு வேகவேகமாக காரில் ஏறி தப்பி சென்று விட்டனர். இதையடுத்து சாலையோரத்தில் நின்ற சிலரிடம் எனது நிலையை எடுத்து கூறினேன். அவர்கள் தந்த செல்போனை வைத்து எனது தந்தைக்கு தகவல் கொடுத்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து கடத்தல் கும்பலிடம் இருந்து மீண்ட காயத்ரிக்கு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காயத்ரியை வடமாநில கும்பல் எதற்காக கடத்தியது? இதில் வேறு யாராவது உள்ளூர் நபர்கள் சம்பந்தப்பட்டு இருக்கிறார்களா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

பட்டதாரி பெண்ணை காரில் வடமாநில கும்பல் கடத்தி சென்ற சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News