செய்திகள்
கீழ்வேளூர் அருகே தீ விபத்தில் கூரை வீடு எரிந்து சேதம்
கீழ்வேளூர் அருகே கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகின. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள செறுநல்லூர் நடுத்தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வி. இவர் தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது இவர்கள் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே தாமரைச்செல்வி குடும்பத்துடன் வெளியே ஓடி வந்தார்.
இதுகுறித்து கீழ்வேளூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இதில் அனைத்து பொருள்கள் எரிந்து நாசமடைந்தன. இதன் சேத மதிப்பு ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது. கீழ்வேளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.