செய்திகள்
கைது

ஜோலார்பேட்டை அருகே மனைவியை எரித்து கொன்ற டெய்லர் கைது

Published On 2019-09-12 16:48 IST   |   Update On 2019-09-12 16:48:00 IST
ஜோலார்பேட்டை அருகே தகராறில் மனைவியை எரித்து கொன்ற டெய்லர் கைது செய்யப்பட்டார்.

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அம்மையப்பன் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38) டெய்லர். இவரது மனைவி ராதிகா (33). இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுரேஷ் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சுரேஷ் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து மனைவி ராதிகா மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதில் ராதிகாவின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் வலி தாங்காமல் ராதிகா அலறி கூச்சலிட்டார். ராதிகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ராதிகாவை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சுரேஷ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவரை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராதிகா நேற்று மாலை உயிரிழந்தார்.

இது குறித்து சுரேஷ் மீது கொலை வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News