பள்ளிக்கரணை அருகே ரூ.20 ஆயிரம் கடன் தகராறில் பெண் பூ வியாபாரி கொலை
சோழிங்கநல்லூர்:
பள்ளிக்கரணையை அடுத்த மயிலை, பாலாஜி நகரில் வசித்து வந்தவர் லட்சுமி (வயது45). பூ வியாபாரம் செய்து வந்தார்.
இவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் மற்றொரு லட்சுமி என்பவரிடம் கடந்த 6 மாதத்துக்கு முன்பு ரூ.20 ஆயிரம் கடன் வாங்கினார். இதற்கான வட்டித் தொகையை கடந்த 2 மாதமாக பூ வியாபாரி லட்சுமி கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று பூ வியாபாரி லட்சுமியிடம் கடன் தொகையை திரும்ப கேட்டு லட்சுமியும் அவரது 3 மகன்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பூ வியாபாரி லட்சுமியை தாக்கினர். இதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூ வியாபாரி லட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்த் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.