செய்திகள்
கைது

கிரிக்கெட்டில் தகராறில் கார் டிரைவருக்கு அரிவாள் வெட்டு - 2 பேர் கைது

Published On 2019-09-02 07:12 GMT   |   Update On 2019-09-02 07:12 GMT
2 ஆண்டுக்கு முன்பு கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவருக்கு அரிவாள் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம்:

சிட்லப்பாக்கம், ராமகிரு‌ஷணாநகரில் வசித்து வருபவர் சிவா (வயது 29). கால்டாக்சி டிரைவர். இவர் கடந்த 31-ந் தேதி இரவு வீட்டு முன்பு காரை நிறுத்திவிட்டு நடந்து சென்றார்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த 3 வாலிபர்கள் திடீரென சிவாவை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டதால் 3 வாலிபர்களும் தப்பி ஓடிவிட்டனர்.

அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த சிவாவுக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிட்லப்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது 2 ஆண்டுக்கு முன்பு கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை முயற்சி நடந்திருப்பது தெரிந்தது. சிவாவின் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், அப்புபட்டி கிராமம். கடந்த 2017-ம் ஆண்டு கிராமத்தில் நடந்த கிரிக்கெட் விளையாட்டின் போது சிவாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கார்த்தியை சிவா தாக்கியதாக தெரிகிறது. இதற்கிடையே சிட்லப்பாக்கத்தில் தங்கி சிவா கால்டாக்சி ஓட்டி வந்தார். இதே போல் கார்த்திக்கும் துரைபாக்கத்தில் தங்கி கால்டாக்சி ஓட்டி வந்திருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் சந்தித்து உள்ளனர். பழைய பகையை மனதில் வைத்த கார்த்திக் நண்பர்களுடன் சேர்ந்து சிவாவை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக கார்த்திக், அவரது நண்பர் முத்து ஆகிய இருவரையும் போலீசார் கைதுசெய்தனர். தலைமறைவான தாமோதரனை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News