செய்திகள்
எஸ்கலேட்டர்

கிண்டி நட்சத்திர ஓட்டலில் எஸ்கலேட்டரில் சிக்கி தொழில் அதிபர் பலி

Published On 2019-08-30 10:18 GMT   |   Update On 2019-08-30 10:18 GMT
கிண்டி நட்சத்திர ஓட்டலில் எஸ்கலேட்டரில் சிக்கி தொழில் அதிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆலந்தூர்:

சென்னை, எழும்பூர் பாந்தியன் சாலையில் வசித்து வந்தவர் ரமேஷ் ஜெய்துலானி (வயது 74) தொழில் அதிபர். இவர் நண்பரான போயஸ் கார்டன் பகுதியை சேர்ந்த மிர்துன் ஜெயசிங் (74) என்பவருடன் கிண்டி 100 அடி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார்.

அவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் இருவரும் பேசியபடி ஓட்டலில் உள்ள ‘எஸ்கலேட்டரில்’’ ஏறிச் சென்றனர்.

அப்போது மிர்துன் ஜெயசிங் நிலைதடுமாறினார். உடனே அவருக்கு உதவ ரமேஷ் ஜெய்துலானி முயன்றார். இதில் இருவரும் எஸ்கலேட்டரில் சிக்கி கீழே விழுந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டல் ஊழியர்கள் 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

தலையில் பலத்த காயம் அடைந்து இருந்த ரமேஷ் ஜெய்துலானி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மிர்துன் ஜெயசிங்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News