செய்திகள்
அனந்தசரஸ் குளம்

அத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வில் 253 பேருக்கு அனுமதி - அறநிலையத்துறை

Published On 2019-08-17 16:21 GMT   |   Update On 2019-08-17 16:21 GMT
அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் வைக்கும் நிகழ்வில் 253 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஞ்சீபுரம் :

கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் அத்திவரதர் வைபவம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் அங்குள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஜூலை 31-ம் தேதி வரை சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர், பின்னர் கடந்த 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்தார்.

வாழ்க்கையில் அபூர்வமாக கிடைக்கும் தரிசனம் என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளா, மராட்டியம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து அத்திவரதரை தரிசித்தனர். அத்திவரதரை சயன கோலத்தில் 43 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அப்படி தரிசனம் செய்தவர்களில் பலர், அவர் நின்ற கோலத்தில் அருள்பாலித்த போதும் அவரை தரிசிப்பதற்காக வந்தனர். பொதுதரிசன வரிசையில் பல மணி நேரம் காத்து நின்று மக்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், கலையுலகைச் சேர்ந்தவர்கள் என ஏராளமான முக்கிய பிரமுகர்களும் வந்து அத்திவரதரை தரிசித்தனர்.

தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்ததால் காஞ்சீபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டது. விடுமுறை நாட்களில் கட்டுக்கடங்காத பக்தர்கள் திரண்டனர். இதனால் போலீசார் பக்தர்களை பகுதி பகுதியாக பிரித்து தரிசனத்துக்கு அனுப்பினார்கள்.

கடைசி நாளான நேற்றும் அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக காலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் திணறினார்கள். இரவு 9 மணி அளவில் ராஜகோபுர வாசல் மூடப்பட்டது. அப்போது கோவில் வளாகத்திற்குள் காத்திருந்த பத்தர்கள் மட்டும் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். இரவில் நீண்ட நேரம் தரிசனம் நீடித்தது. அதன்பின்னர் நேற்று இரவுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவடைந்தது.

நேற்று வரை அத்திவரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று மாலை சுமார் 5 மணியளவில், அத்திவரதர்- உற்சவர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிலையில், அத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், பட்டாச்சாரியார்கள் 15 பேர், வல்லுநர் குழு 20 பேர், பணியாளர்கள் 50 பேர் உட்பட 253 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தி வரதரை அனந்தசரஸ் குளத்தில் வைக்கும் நிகழ்வை புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதி இல்லை. அத்தி வரதரை அனந்தசரஸ் குளத்தில் வைக்கும் நிகழ்வில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 253 பேருக்கும் இன்று இரவு மட்டும் செல்லத்தக்க வகையில் அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
Tags:    

Similar News