செய்திகள்
விபத்தில் கவிழ்ந்த ஆம்னி பஸ்சை கிரேன் மூலம் அப்புறப்படுத்திய காட்சி.

தடுப்பு கட்டையில் மோதி ஆம்னிபஸ் கவிழ்ந்தது- கடலூர் கலெக்டரின் உறவினர் பலி

Published On 2019-08-17 10:45 GMT   |   Update On 2019-08-17 10:45 GMT
வடலூர் அருகே தடுப்பு கட்டையில் மோதி ஆம்னி பஸ் கவிழ்ந்த விபத்தில் கடலூர் கலெக்டரின் உறவினர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மந்தாரகுப்பம்:

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் இருந்து சென்னையை நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் கும்பகோணம்- ஜெயங்கொண்டம்- விருத்தாசலம் வழியாக வந்தது. அந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அந்த பஸ்சை பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த டிரைவர் ராஜா (வயது 42) ஓட்டிவந்தார்.

அந்த ஆம்னி பஸ் நள்ளிரவு 2 மணிக்கு கடலூர் மாவட்டம் வடலூரில் வந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கட்டையில் பயங்கரமாக மோதியது.

இதில் ஆம்னி பஸ் தலைகுப்புற கவிழ்ந்தது. பஸ்சில் பயணம் செய்த பேராவூரணியை அடுத்த வீரியன்கோட்டை பகுதியை சேர்ந்த ஹரினி (24), சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். பி.இ.பட்டதாரியான இவர் கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வனின் உறவினர் ஆவார்.

மேலும் பஸ்சில் பயணம் செய்த செல்வி, மல்லிகா, உமாபதி, ஹாசியா, இளங்கோவன், தமிழரசன் டிரைவர் ராஜா உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

விபத்தில் காயம் அடைந்தவர்களை குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இறந்துபோன ஹரினி உடல் பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் உள்ளது. விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ்சை கிரேன் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News