செய்திகள்
தீக்குளிப்பு

ஈரோட்டில் 8-ம் வகுப்பு மாணவன் தீக்குளித்து பலி

Published On 2019-08-06 15:53 IST   |   Update On 2019-08-06 15:53:00 IST
ஈரோட்டில் 8-ம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு சூரம்பட்டி பூசாரி சென்னிமலை வீதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி லதா. இவர்களுக்கு கவுசல்யா என்ற மகளும், ரஞ்சித் என்ற மகனும் உள்ளனர். சேகர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

ரஞ்சித் 8-ம் வகுப்பு படித்து வந்தான். ரஞ்சித் சில நாட்களாகவே பள்ளிக்கு சரியாக போகாமல் இருந்து வந்துள்ளான். இதனால் லதா மகனை பள்ளிக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கினார்.

இந்நிலையில் சம்பவத்தன்று ரஞ்சித் பள்ளிக்கு செல்ல தயாரானான். ஆனால் திடீரென்று பள்ளிக்கு போகாமல் வீட்டில் இருந்துள்ளான். இதனால் ரஞ்சித்தின் பாட்டி பள்ளிக்கு செல்லுமாறு கூறி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.

பின்னர் லதா வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் சமையலறையில் இருந்து ரஞ்சித்தின் அலறல் சத்தம் கேட்டு லதா திடுக்கிட்டு ஓடிவந்து பார்த்தார் . அப்போது ரஞ்சித் தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளித்து அலறிக்கொண்டு இருந்தான்.

அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ரஞ்சித் மீது எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

சிகிச்சைக்காக ரஞ்சித் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சித் பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து அரசு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News