செய்திகள்
கொலை

நெய்வேலி அருகே தொழிலாளி அடித்துக்கொலை- தந்தை வெறிச்செயல்

Published On 2019-08-06 05:35 GMT   |   Update On 2019-08-06 05:35 GMT
நெய்வேலி அருகே குடிபோதையில் ரகளை செய்த மகனை தந்தை அடித்து கொன்ற சம்பவம் அந்தபகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் அருகே உள்ளது பெரியகாப்பாங்குளம். இந்த பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 60). இவரது 2-வது மகன் சிவக்குமார் (37) கூலித்தொழிலாளி.

இவருக்கு சீத்தா (29) என்ற மனைவியும், 2 பெண்குழந்தைகளும் உள்ளனர். சிவக்குமாருக்கு குடிப்பழக்கம் உண்டு. இவர் தினமும் மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து வந்தார்.

இதனால் சிவக்குமாருக்கும், சீத்தாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. கணவன் தினமும் மது குடித்துவிட்டு தகராறு செய்வதால் சீத்தா மனவேதனை அடைந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவனிடம் தகராறு செய்துவிட்டு சீத்தா தனது குழந்தைகளுடன் கச்சிராயநத்தத்தில் உள்ள தனது தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார்.

சிவக்குமார் நேற்று மாலை தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த மனைவி சீத்தாவை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு சீத்தா மறுத்துவிட்டார். இதனால் மனம் உடைந்த சிவக்குமார் மதுகுடித்துவிட்டு பெரிய காப்பாங்குளத்தில் உள்ள தனது தந்தை பரமசிவம் வீட்டிற்கு வந்தார்.

அங்கிருந்த தனது தாய் மாலாவிடம் குடிபோதையில் தகராறு செய்தார். இதை அறிந்ததும் ஏன் குடித்துவிட்டு ரகளை செய்கிறாய் ? என்று மகனிடம் பரமசிவம் தட்டிக்கேட்டார். இதில் தந்தை மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த பரமசிவம் மகனை அடித்து உதைத்து கீழே தள்ளினார். இதில் தலை கல்லில் பட்டு பலத்த காயம் அடைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்துவிட்டார்.

இது குறித்து தெர்மல் போலீசில் புகார்செய்யப்பட்டது. அதன்பேரில் பண்ருட்டி துணைபோலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், தெர்மல் இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மகனை அடித்து கொன்ற பரமசிவத்தை கைது செய்தனர்.
Tags:    

Similar News