செய்திகள்
நகை திருட்டு

வேப்பூர் அருகே வீடுபுகுந்து பெண்ணை தாக்கி நகை கொள்ளை

Published On 2019-07-27 09:57 IST   |   Update On 2019-07-27 09:57:00 IST
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி 11 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பூர்:

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது ஆதியூர். இந்த ஊரை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மனைவி தீபிகா (வயது 25).

சின்னத்துரை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் தீபிகா ஆதியூரில் உள்ள தனது மாமியார் கருப்பாயியுடன் வசித்து வந்தார்.

நேற்று இரவு தீபிகா, கருப்பாயி ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். காற்றுக்காக கதவை பூட்டாமல் திறந்து வைத்திருந்தனர்.

நேற்று நள்ளிரவு மர்ம மனிதர்கள் 2 பேர் தீபிகாவின் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் வீட்டுக்குள் புகுந்து அங்கு தூங்கி கொண்டிருந்த தீபிகாவை தாக்கி கழுத்தை நெரித்தனர். திடுக்கிட்டு எழுந்த அவர் கூச்சலிட்டார்.

அப்போது அந்த மர்ம மனிதர்கள் தீபிகாவின் கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்து கொண்டு ஓடிவிட்டனர். கொள்ளையர்கள் தாக்கியதில் தீபிகா காயம் அடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News