செய்திகள்
கைது

தாம்பரம் இரட்டை கொலையில் 4 வாலிபர்கள் சிக்கினர்

Published On 2019-07-16 09:56 GMT   |   Update On 2019-07-16 09:56 GMT
தாம்பரம் இரட்டை கொலையில் 4 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம்:

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் கடப்பேரி அற்புதம் நகரைச் சேர்ந்தவர் பிரதீப்குமார், கிழக்கு தாம்பரம் ஆதி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்.

நண்பர்களான இருவர் மீதும் பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளன. போலீசாரின் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்று இருந்தனர்.

நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சென்ற போது பிரதீப்குமார், சுரேஷ் இரு வரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக 4 பேரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் என்ற லாரி டிரைவரை பிரதீப் குமாரும், சுரேசும் சேர்ந்து தாக்கி உள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் இருவர் மீதும் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதன் பிறகு ரங்கநாதனின் மகன் மணிகண்டன், மருமகன் பாபு ஆகியோருடன் பிரதீப்குமார், சுரேஷ் ஆகியோருக்கு விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஆயுதங்களுடன் அப்பகுதியில் சுற்றி வந்துள்ளனர். அப்போதுதான் தீர்த்துக் கட்டப்பட்டு இருக்கிறார்கள். லாரி டிரைவர் ரங்கநாதன் தாக்கப்பட்ட முன் விரோதத்தில்தான் பிரதீப்குமாரும், சுரேசும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இது தொடர்பாக பிடிபட்ட 4 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News