செய்திகள்
ஊழியர்களை தாக்கிய கும்பல்

பெட்ரோல் பங்கில் அரிவாளை காட்டி மிரட்டி ஊழியர்களை தாக்கிய கும்பல்

Published On 2019-07-15 11:20 GMT   |   Update On 2019-07-15 11:20 GMT
பெட்ரோல் பங்கில் அரிவாளை காட்டி மிரட்டி ஊழியர்களை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தாம்பரம்:

பெருங்களத்தூரை அடுத்த ஆலப்பாக்கத்தில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு ஊழியராக இளவரசன் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று இரவு 10 மணியளவில் 3 வாலிபர்கள் ஆட்டோவில் பெட்ரோல் பங்கிற்கு வந்தனர். அப்போது ஊழியர் இளவரசனுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் இளவரசனை அவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பங்க் ஊழியர்கள் 2 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார். சிக்கிய 2 பேரையும் ஆட்டோவுடன் அங்கு வைத்து விசாரித்து கொண்டு இருந்தனர்.

இதற்கிடையே தப்பி ஓடிய வாலிபர், திடீரென நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டோருடன் மோட்டார் சைக்கிள்களில்பெட்ரோல் பங்கிற்கு வந்தார். அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் இருந்த அவர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்களை சரமாரியாக தாக்கினர். பெட்ரோல் நிரப்ப வந்த வாகன ஓட்டிகளையும் அடித்து விரட்டினர்.

மேலும் பங்கில் உள்ள கண்ணாடிகளையும் நொறுக்கினர். இதனை தடுக்க முயன்ற பங்க் உரிமையாளர் ராஜீவ் காந்திக்கு கையில் வெட்டு விழுந்தது.

பின்னர் மர்ம கும்பல் பெட்ரோல் பங்கில் சிறைவைக்கப்பட்டு இருந்த நண்பர்கள் 2 பேர் மற்றும் ஆட்டோவை மீட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரிவாளுடன் மர்ம கும்பல் நடத்திய தாக்குதல் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இது சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நெற்குன்றம் பகுதியை சேர்ந்த மணி மற்றும் கூட்டாளிகள் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து பீர்க்கன்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News