செய்திகள்
கொலை

தாம்பரம் அருகே 2 வாலிபர்கள், ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை

Published On 2019-07-15 08:57 GMT   |   Update On 2019-07-15 08:57 GMT
தாம்பரம் அருகே 2 வாலிபர்கள், ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம்:

மேற்கு தாம்பரம் அருகே உள்ள அற்புதம் நகரை சேர்ந்தவர்கள் பிரதீப், சுரேஷ்.

நண்பர்களான இவர்கள் இருவரும் இன்று காலை 11.30 மணி அளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அற்புதம் நகரிலேயே வைத்து ஒரு கும்பல் 2 பேரையும் வழிமறித்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதீப், சுரேஷ் இருவரும் அக்கும்பலிடம் இருந்து தப்பிப்பதற்காக மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு ஓடினார்கள். இருப்பினும் 2 பேரையும் விரட்டிச் சென்ற மர்ம நபர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் பிரதீப், சுரேஷ் இருவருக்கும் சரமாரியாக வெட்டு விழுந்தது. உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டதால் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்கள்.

கொலை செய்யப்பட்ட 2 பேரும் சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் இளைஞர் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை நடந்ததா? என்பது பற்றி தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இருப்பினும் கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை. மர்மம் நீடிக்கிறது.

அற்புதம் நகரில் ஊருக்குள் வைத்தே பிரதீப், சுரேஷ் இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையுண்ட வாலிபர்களில் ஒருவரின் இடுப்பில் பெரிய பட்டாக்கத்தி சொருகி வைக்கப்பட்டுள்ளது. இதனால் 2 பேரும் வேறு யாரையாவது கொலை செய்யும் எண்ணத்தில் சுற்றி வந்தார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News