வேலூரில் திமுக பிரமுகரின் வீட்டில் ரூ.27 லட்சம் பறிமுதல்
வேலூர்:
வேலூர் அலமேலு மங்காபுரம் அடுத்த புதுவசூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 50). ரியல் எஸ்டேட் செய்து வருகிறார். தி.மு.க. பிரமுகரான வசூர் நடராஜனின் சகோதரர் ஆவார். ஏழுமலையும் தி.மு.க.வில் உறுப்பினராக உள்ளார்.
இந்நிலையில், வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் என 10 பேர் கொண்ட குழுவினர், ஏழுமலை வீட்டுக்கு நேற்று மதியம் திடீரென காரில் வந்து இறங்கினர். இதைப் பார்த்த ஏழுமலை மற்றும் குடும்பத்தினர், வீட்டில் வைத்திருந்த கட்டைப்பை ஒன்றை வேகவேகமாக ஓடிச்சென்று தூக்கி வீட்டின் பின்பக்கம் வீசினார்.
இதை கவனித்த வருமான வரித்துறையினர், அந்த பையை பறிமுதல் செய்து சோதனையிட்டனர். அப்போது, அதில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. அதில் ரூ.27 லட்சத்து 74 ஆயிரம் இருந்தது. தொடர்ந்து, வருமானவரித்துறையினர் அந்த வீட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், வீட்டில் தீவிரமாக சோதனை நடத்தினர். அதில், சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
தொடர்ந்து, பறிமுதல் செய்த பணம் குறித்து ஏழுமலையிடம் வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தினர்.
தேர்தலில் ஓட்டு போட வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக என அவரிடம் அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர், அது தன்னுடைய பணம் தான் என்று கூறினார்.
ரியல் எஸ்டேட் தொழிலில் வீடு விற்பது மற்றும் வாங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் கிடைத்த பணத்தை வீட்டில் உள்ளவர்களிடம் கொடுத்து வைத்திருந்தேன். இந்நிலையில், வீட்டுக்குள் 10 பேர் (அதிகாரிகள்) திடீரென வந்ததை பார்த்து பயந்து போனதால், வீட்டில் இருந்தவர்கள் பணப்பையை வெளியில் தூக்கி வீசி விட்டதாக அவர் கூறினார்.
இதையடுத்து, ரூ.27 லட்சத்து 74 ஆயிரத்தை பறிமுதல் செய்த வருமான வரித்துறையினர், அதற்கான உரிய ஆவணங்களை ஏழுமலையிடம் கேட்டனர். அதற்கு அவர் மழுப்பலாக பதில் அளித்ததார்.
இதைத்தொடர்ந்து, அவருடைய வங்கிக் கணக்குகள் மற்றும் கைப்பற்றிய பணத்துக்கான ஆவணங்கள் குறித்து தீவிரமாக விசாரித்தனர். ஆனால், பணத்துக்கான ஆவணங்கள் எதுவும் ஏழுமலையிடம் இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து பறிமுதல் செய்த பணத்தை வேலூர் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்ற வருமானவரித்துறையினர், அதை தாசில்தார் ரமேஷிடம் ஒப்படைத்தனர்.அவர், அந்த பணத்தை கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்க உத்தரவிட்டார். உரிய ஆவணங்களை கொண்டுவந்து காண்பித்ததும் ஏழுமலையிடம் பணம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று மதியம் தொடங்கிய சோதனை, இரவு 7 மணிக்கு முடிந்தது. தொடர்ந்து அவரது வீட்டில் அதிகாரிகள் 7 மணிநேரம் சோதனை நடத்தியுள்ளனர்.
ஏற்கனவே பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தான் வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் மீண்டும் தி.மு.க. பிரமுகர் வீட்டில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.