செய்திகள்
முக ஸ்டாலின்- வைகோ

டெல்லியில் 3 நாட்கள் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின்-வைகோவுக்கு அழைப்பு

Published On 2019-07-12 10:38 IST   |   Update On 2019-07-12 12:44:00 IST
விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 3 நாட்கள் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதில் பங்கேற்குமாறு மு.க.ஸ்டாலின் மற்றும் வைகோவுக்கு அழைப்பு விடுக்க உள்ளனர்.
ஈரோடு:

உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்திற்கும், கெயில், பாரத் பெட்ரோலியம் குழாய் பதிக்கும் திட்டத்திற்கும் விவசாயிகள் கூட்டமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

உயர் மின் கோபுரங்களால் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மின்சாரம் கொண்டு செல்லும் திட்டத்தை விவசாயிகள் எதிர்க்கவில்லை. மாறாக விவசாய விளைநிலத்தில் மின்கோபுரங்கள் அமைப்பதை மட்டுமே எதிர்த்து வருகின்றோம். சாலையோரத்தில் கேபிள்கள் வழியாக மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை. இக்கோரிக்கையை ஏற்க மத்திய, மாநில அரசுகள் மறுத்து வருகின்றது.

விவசாய விளைநிலத்தை கூறு போட வேண்டும் என்பது மட்டுமே அரசுகளின் நோக்கமாக உள்ளது. இதற்கு வசதியாக இந்திய தந்தி சட்டத்தை பயன்படுத்தி நிலத்தை விவசாயிகளிடமிருந்து பறித்து வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் விவசாயத்தொழில் என்பது முற்றிலும் அழிந்து வாழ்வாதாரத்திற்காக பன்னாட்டு நிறுவனங்களிடம் கையேந்தும் நிலை வந்துவிடும். எனவே உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கெயில், பாரத் பொட்ரோலியம் ஐடிபி எல் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாய கூட்டமைப்பினர் சார்பில் டெல்லியில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதன்படி 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 3 நாட்களுக்கு டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். இப்போராட்டத்தில் செயல்பாட்டில் உள்ள உயர் மின் கோபுர திட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடும், வருட வாடகையும் வழங்க வேண்டும், விளைநிலங்களுக்கு பதிலாக சாலையோரம் கொண்டு செல்ல வேண்டும்,.

ஐடிபிஎல் திட்டத்தினை சாலையோரமாக நிறைவேற்ற வேண்டும், இந்திய அரசியலமைப்பு சட்டம் உரிமைகளை கடுமையாக பாதிக்கும் இந்திய தந்தி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட உள்ளது. பாராளுமன்றம் நடந்து வரும் நிலையில் நாட்டின் கவனத்தை ஈர்க்க இப்போராட்டம் பயனுள்ளதாக இருக்கும். போராட்ட முடிவில் மத்திய மின்சார துறை, சுற்றுச்சூழல் துறை, வேளாண் துறை, சட்டத்துறை அமைச்சர், நிதி ஆயோக் ஆகியோர்களை சந்தித்து கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற எம்பிக்களுடன் சென்று மனு அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:-

தற்போது விவசாயிக்கு எதிரான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பாரத் பெட்ரோலியம் குழாய் அமைக்கும் திட்டம், கெயில் திட்டம், உயர் மின் கோபுரம் பதிக்கும் திட்டம் போன்ற திட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1885 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தந்தி சட்டத்தை வைத்து தான் தற்போது விவசாய விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. எனவே தந்தி சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

இதே போன்று 1962ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பெட்ரோலியம் தாதுப்பொருட்கள் குழாய் பதிக்கும் சட்டத்தை மாற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது இதில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

திமுக தலைவர் மு. க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் முத்தரசன், பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போன்ற தலைவர்களை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அவர்களை சந்தித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News