செய்திகள்
பார்சம்பேட்டையில் ரெயில் வேகனில் தண்ணீர் நிரப்புவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழாய்.

சென்னைக்கு ரெயிலில் ஒரு தடவை தண்ணீர் கொண்டு வர ரூ.8.6 லட்சம் செலவு

Published On 2019-07-09 11:18 GMT   |   Update On 2019-07-09 11:24 GMT
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் ஒரு தடவை தண்ணீர் கொண்டு வர 8.6 லட்சம் ரூபாய் ரெயில்வே துறைக்கு தமிழக அரசு கட்டணமாக செலுத்துகிறது.

வேலூர்:

சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு காவிரி கூட்டு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

ஜோலார்பேட்டை மேட்டு சக்கரகுப்பத்தில் உள்ள 5.05 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட காவிரி கூட்டு குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து 3½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பார்சம்பேட்டை ரெயில்வே கேட் பகுதிக்கு குழாயில் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து ரெயில் வேகன்களில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், மாநில நெடுஞ்சாலைத் துறையினர், மின்வாரியம், ரெயில்வே நிர்வாகம் என பல துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முயற்சியால் தண்ணீர் கொண்டு செல்லும் பணிகள் சிறப்பாக முடிவடைந்துள்ளன.

மேட்டுசக்கர குப்பம் பகுதியில் இருந்து பார்சம்பேட்டை வரை குழாய் பதிக்கும் பணிகள் முடிந்து சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

அதேபோல் மேட்டு சக்கரகுப்பம் பகுதியில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீரை ஏற்ற அங்கு பைப்லைன்கள் மற்றும் வால்வுகள் அமைக்கும் பணிகளும் முடிவடைந்துள்ளன.

இதைத் தொடர்ந்து மேட்டூரில் இருந்து கொண்டு வரப்படும் காவிரி கூட்டு குடிநீரை மேட்டு சக்கரகுப்பம் பகுதியில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் பம்பிங் செய்து சேமித்து வைத்து நேற்று வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

இந்த தண்ணீர் இன்று காலை பார்சம்பேட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து 5-வது பிளாட்பாரத்தில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு கொண்டு சென்று அங்கு பொருத்தப்பட்டுள்ள குழாய்கள் மூலம் ரெயில்வே வேகன்களில் நிரப்பப்படும். இதற்கான சோதனை ஓட்டம் இன்று நடந்து வருகிறது.

சோதனை ஓட்டம் திருப்திகரமாக இருந்ததால் திட்டமிட்டபடி நாளை புதன்கிழமை முதல் சென்னைக்கு ரெயில் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படும்.

இப்பணிகளில் 8 பொறியாளர்கள் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. 50 வேகன்களில் 1 முறை 25 லட்சம் லிட்டர் தண்ணீர் என்று மொத்தம் 4 முறை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

இதற்கு ஒரு தடவைக்கு ரூ8.6 லட்சம் ரூபாய் ரெயில்வே துறைக்கு தமிழக அரசு கட்டணமாக செலுத்துகிறது. சராசரியாக ஒரு லிட்டருக்கு 34 பைசா செலுத்தப்படுகிறது. ஒருதடவை தண்ணீர் கொண்டு செல்லும் போது 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை தண்ணீர் கசிந்து வீணாகி விடும்.

50 வேகன்களில் ஒரு வேகன் 55 ஆயிரம் லிட்டர் சுமக்கும் திறன் கொண்டது. ஜோலார்பேட்டையில் நீர் ஏற்றும் இடமான பார்சம்பேட்டையில் இருந்து வில்லிவாக்கத்தில் உள்ள வடக்கு ஜகநாத் வரை சுமார் 204 கி.மீட்டர் தூரம் செல்ல வேண்டும்.

இந்த தூரத்தை கடக்க 5 மணி நேரம் முதல் 7 மணி நேரம் வரை ஆகலாம் என்பதால் ஒருநாளைக்கு 3 தடவையே சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லக்கூடிய நிலை உள்ளது. அவ்வாறு ஒரு நாளைக்கு 3 முறை இயக்கப்பட்டால் 7.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டு செல்லப்படும்.

ஆரம்பத்தில் 6 மாத காலத்திற்கு ரெயிலில் தண்ணீர் கொண்டுவர முன்மொழியப்பட்டது. நிலத்தடி நீர் மட்டம் மேம்பட்டவுடன் சேவையை குறுகியதாக நிறுத்த வாய்ப்புள்ளது.

30 நாட்களுக்கு 3 முறை ரெயிலில் தண்ணீர் கொண்டு சென்றால் தமிழக அரசு ரெயில்வே துறைக்கு சுமார் 7.74 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்.

Tags:    

Similar News