செய்திகள்
ஜெயில் (கோப்பு படம்)

பஸ்சில் 43 கிலோ கஞ்சா கடத்தல் - கைதான வடமாநில இளைஞர்கள் 5 பேர்

Published On 2019-07-08 16:43 IST   |   Update On 2019-07-08 16:43:00 IST
ஈரோடு அருகே பஸ்சில் 43 கிலோ கஞ்சா கடத்தி கைதான வடமாநில இளைஞர்கள் 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
ஈரோடு:

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் உள்ள சோதனை சாவடியில் கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஈரோடு நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது.

அந்த பஸ்சை நிறுத்தி போலீசார் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது அந்த பஸ்சில் பயணம் செய்த 5 பேரிடம் சந்தேகப்படும்படி மூன்று மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. மூன்று மூட்டைகளில் மொத்தம் 43 கிலோ கஞ்சா இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இதையடுத்து போலீசார் அந்த 5 பேரையும் கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலம் கண்ஜாம் அருகே உள்ள தன்திலன் பகுதியை சேர்ந்த பவஸ்தின் ஜனா (வயது29), கஜபதி ராய் பங்கா பகுதியைச் சேர்ந்த பிரதாப் மாஜி (26), அனில்மைர (19), ராய கோடா கோளா பகுதியை சேர்ந்த சரத் மாஜி (19) மட்டும் ராய் பங்கா பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.

அவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி கோவைக்கு கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் முதன் முதலில் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.

இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 43 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான 5 பேரில் ஒருவர் 17 வயது சிறுவன் என்பதால் அந்தச் சிறுவன் கோவை சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டான்.

Similar News