அந்தியூர் அருகே மீனவர் வலையில் சிக்கிய பெருமாள் சிலை
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி கீழ்வானியில் பவானி ஆறு உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஆற்றுப் பாலத்தில் ஆப்பக் கூடல் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 25), கார்த்தி (33), ஆனந்தகுமார் (25), அருள் (28) ஆகிய 4 பேர் வலைவீசி மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
வீசிய வலையை எடுத்த போது அது வரவில்லை. மிகவும் கனமாக இருந்தது. எனினும் 4 பேரும் சேர்ந்து இழுத்தனர்.
அப்போது வலையில் வெண்கலத்தாலான ஒரு அடி உயர பெருமாள் சிலை இருந்தது. இதை கண்ட மீன் பிடித்த இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பிறகு அந்த சிலையை அவர்கள் அந்தியூர் மண்டல துணை தாசில்தார் சரவணனிடம் ஒப்படைத்தனர்.
இந்த சிலையை அந்த பகுதியில் உள்ள கோவிலில் இருந்து யாராவது திருடி கொண்டு ஆற்றில் வீசி விட்டு பிறகு எடுத்து கொள்ளலாம் என போட்டு சென்றிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
இது குறித்து சிலை திருட்டு தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி எந்த கோவிலிலாவது சிலை மாயமாகி உள்ளதா? என விசாரித்து வருகிறார்கள்.