செய்திகள்
டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்திய காட்சி

கடலூர் அரசு மருத்துவமனையில் கருப்பு பட்டை அணிந்து டாக்டர்கள் போராட்டம்

Published On 2019-07-02 18:15 GMT   |   Update On 2019-07-02 18:15 GMT
கடலூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் கருப்பு பட்டை மற்றும் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:

கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சில டாக்டர்கள் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். இதற்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாவட்ட செயலாளர் டாக்டர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்.

பிறமாநில அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், மருத்துவ கல்லூரிகளில் பணியிடங்கள் குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும், எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்பசுகாதார நிலையங்களில் பணிபுரிந்து வரும் டாக்டர்கள் பின்னர் மருத்துவ மேற்படிப்பு முடித்தால் அவர்களுக்கு கலந்தாய்வு முறையில் பணி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இது குறித்து டாக்டர் ஸ்ரீதரன் கூறுகையில், பிறமாநில அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால் அரசிடம் இருந்து இதுவரை எந்தவித பதிலும் இல்லை. இது உள்பட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (அதாவது நேற்று) டாக்டர்கள் தின விழாவை நாங்கள் புறக்கணிக்கிறோம். இந்த நாளை கருப்புநாளாக நாங்கள் அனுசரித்து அரசுக்கு எங்கள் எதிர்ப்பைதெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிகிறோம். மாவட்டம் முழுவதும் 350 டாக்டர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர் என் றார்.டாக்டர்களின் இந்த போராட்டத்தினால் மருத்துவ சேவையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. போராட்டத்தில் கலந்துகொண்ட டாக்டர்கள் வழக்கம்போல தங்கள் பணிகளை மேற்கொண்டனர். டாக்டர்களின் போராட்டத்தால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
Tags:    

Similar News