செய்திகள்
இளம்பெண் கடத்தல்

நாகூரில் வீடு புகுந்து இளம்பெண் கடத்தல் - வாலிபர் கைது

Published On 2019-07-02 17:17 GMT   |   Update On 2019-07-02 17:17 GMT
நாகூரில் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:

நாகையை அடுத்த நாகூர் யூசுப்பியா நகரை சேர்ந்த ஹாஜாமைதீன் (வயது 40) இவரது வீட்டில் 24 வயதுடைய உறவுக்கார பெண் ஒருவர் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 4 பேர் கும்பல் ஹாஜாமெய்தீன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரது உறவுக்காரப் பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கி கடத்தி சென்று விட்டனர்.

இதனை தடுக்க முயன்ற ஹாஜா மைதீன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஹாஜாமெய்தீன் நாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை கடத்தி சென்ற 4 பேரை தேடி வந்தனர்.

அப்போது மியான் தெருவில் நின்று கொண்டிருந்த முகமது தாரிக் (19) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முகமது தாரிக் மற்றும் 3 பேர் சேர்ந்து பெண்ணை தூக்கி சென்றது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் முகமது தாரிக்கை கைது செய்தனர்.

தற்போது கடத்தி செல்லப்பட்ட இளம்பெண் எங்கு இருக்கிறார்? என்று போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். தலைமறைவாக இருந்து வரும் 3 வாலிபர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News