செய்திகள்
புதுக்கோட்டையில் நடைபயிற்சி சென்றபோது ரவுடி வெட்டிக்கொலை
புதுக்கோட்டையில் இன்று காலை நடைபயிற்சி சென்றபோது ரவுடியை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கோவில் பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் பாண்டி(வயது 38). இவர் இன்று காலை திருவப்பூர் பகுதியில் நடை பயிற்சி முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் அருகே உள்ள கடை வீதியில் சென்று கொண்டிருந்த போது சுரேஷ் பாண்டியை வழிமறித்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சுரேஷ் பாண்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் சுரேஷ் பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுரேஷ்பாண்டி மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் முன்விரோதம் காரணமாக அவரை மர்மநபர்கள் கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.