செய்திகள்

பல்லாவரம் அருகே விபத்து- தொழிலாளி பலி

Published On 2019-06-04 09:10 GMT   |   Update On 2019-06-04 09:10 GMT
பல்லாவரம் அருகே இன்று காலை குப்பை லாரி மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
பல்லாவரம்:

பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர், அருணாச்சலம் தெரு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவருடைய மனைவி கலைவாணி ( 32). இவர்களது உறவினர் அரவிந்தன் (19)).

இவர்கள் மூவரும் பல்லாவரம் நகராட்சியில் துப்புரவு ஊழியர்களாக பணி செய்து வந்தனர். இன்று காலை நான்கு மணி அளவில் 3 பேரும் பல்லாவரம் மேம்பாலம் அருகே குப்பை அள்ளும் மினி லாரியில் குரோம்பேட்டை நோக்கி ஜிஎஸ்டி சாலையில் சென்றனர்.

அப்போது அங்கு மற்றொரு பகுதியில் குப்பையை சேகரிப்பதற்காக மினி லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு 3 பேரும் கீழே இறங்கினர்.

அந்த நேரத்தில் சென்னையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த டிப்பர் லாரி திடீரென சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த குப்பை லாரி மீது மோதியது. இதில் அருகே நின்றிருந்த துப்புரவு தொழிலாளி முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் அவரது மனைவி கலைவாணி மற்றும் உறவினர் அரவிந்தன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் சங்கரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News