செய்திகள்

பொன்னமராவதி கலவர வழக்கு - கைதான 22 பேர் சிறையில் அடைப்பு

Published On 2019-06-01 06:23 GMT   |   Update On 2019-06-01 06:23 GMT
பொன்னமராவதி கலவர வழக்கு தொடர்பாக கைதான 22 பேரும் திருமயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
பொன்னமராவதி:

தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் செல்வராஜ் மற்றும் அவரது சமூகம் தொடர்பாக 2 பேர் அவதூறாக பேசிய ஆடியோ பதிவு ஒன்று கடந்த மாதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் வசித்து வரும் அந்த சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள், கடந்த மாதம் 19-ந்தேதி பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீரென போலீஸ் நிலையத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன் கலவரத்தில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கலவரம் தொடர்பாக 1000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வாட்ஸ் அப்பில் அவதூறு கருத்துகளை வெளியிட்ட நபர்களையும் கைது செய்தனர். அவர்கள் பாராளுமன்ற தேர்தலில் சமுதாய வாக்குகளை பெறும் நோக்கத்தில் வாட்ஸ் அப்பில் அவதூறு கருத்துக்களை பரப்பியது தெரியவந்தது.

இதனிடையே வழக்குப் பதிவு செய்யப்பட்ட 1,000 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் காரணமாக போலீசார் கைது நடவடிக்கையை ஒத்தி வைத்திருந்தனர். தற்போது தேர்தல் முடிவடைந்துள்ளதால் கலவரத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகளை போலீசார் தொடங்கியுள்ளனர்.

அதன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் 22 பேரை போலீசார் கைது செய்தனர். நள்ளிரவில் வீடு வீடாக புகுந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்தநிலையில் கைதான 22 பேரும் திருமயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி அவர்களை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 22 பேரும் புதுக்கோட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் பொன்னமராவதி பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News