செய்திகள்

எழும்பூர் நட்சத்திர ஓட்டலில் ரூ.17½ லட்சம் வாடகை பாக்கி- தொழில் அதிபர் கைது

Published On 2019-05-31 11:38 GMT   |   Update On 2019-05-31 11:38 GMT
சென்னை எழும்பூர் நட்சத்திர ஓட்டலில் ரூ.17½ லட்சம் வாடகை பாக்கி தொடர்பாக தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

சென்னை எழும்பூர் காந்தி - இர்வின் சாலையில் நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. இங்கு ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சக்திவேல் என்ற தொழில் அதிபர் தங்கி இருந்து வந்தார். இவர் இந்த ஒட்டலின் வாடிக்கையாளர் என்பதால் அவருக்கு ஓட்டலில் ஒரு அறை ஒதுக்கப்பட்டது.

கடந்த 2017-ம் ஆண்டு முதல் அவர் இந்த ஓட்டலில் தங்கி இருந்தார். அதற்காக முன் பணமாக ஒரு தொகையையும் கொடுத்திருந்தார். அந்த பணத்தில் இருந்து அவரது வாடகை தொகையை கழித்து வந்தனர்.

இந்த நிலையில் அவர் திடீரென்று நிர்வாகத்துக்கு தெரியாமல் ஓட்டல் அறையை காலி செய்து சென்று விட்டார்.

இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள் அவர் செலுத்த வேண்டிய வாடகை தொகையை கணக்கீட்டு பார்த்த போது அவர் ரூ.17½ லட்சம் வாடகை பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக ஓட்டல் மானேஜர் முத்துக்குமார் கடந்த மாதம் எழும்பூர் போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் தொழில் அதிபர் சக்திவேலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News